பாசத்தின் தேசமாய் விளங்கும் என் தமிழ் உள்ளங்களுக்கு வணக்கம்.
காரிருள் நீங்கி கதிரவன் பொங்கும் நேரம் அது சேவலும் கருங்குயிலும் இன்னிசை பாடும் பொன்னான கிராமத்தில் எழிலழகுடன் ஓர் பேரழகி இப்பூமியில் உதித்தாள்.
பெண் பிறந்ததாள் அவளது குடும்பமே மகிழ்ச்சியில் கொண்டாடினர். பெற்றெடுத்தவள் ஒருத்தியாயினும் இவளை வளர்த்தவள் மற்றொரு தாய்.
தன் குரும்புத்தனத்தாலும் கள்ளம் கபடம் இல்லா வெள்ளை உள்ளத்தாலும் அனைவரின் மனதையும் வென்றாள் இவள்.
காலங்கள் கடந்தோடின, கோடைக்காலம் முடிந்து கார்காலம் தொடங்கிய நேரம். வேலைக்கு போக முடியா சூழல் தன் பிள்ளைக்கு உணவு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க தன் உணவையும் பொருட்படுத்தாமல் தன் பிள்ளைக்கு உணவளித்தார் அந்த தந்தை. இப்படி தனது முழு பாசத்தையும் கொட்டி வளர்தார்கள் அந்த பெண்ணை....
வளர்ப்பு தாய்க்கு ஒரு மகன் ஒரு மகள் இருப்பினும் அந்த பெண்ணை தனது பெண்ணாக வளர்த்தார். அவளின் தாய்பாசத்தைக் கண்டு மற்ற இருவரும் பொறாமை கொண்டனர். நம் தாய்க்கு நாம் காட்டிய பாசத்தை விட இவள் கொண்ட பாசம் அதிகமாய் உள்ளன என்று வியந்தனர்.
தான் எங்கு நின்றாலும் தனது தாயின் குறலை கேட்டாள் ஓடி வந்து அருகில் நிற்பாள் இருவரும் பாசத்தால் உலகை வென்றனர்.
வருடம் உருண்டோடின பெண்ணானவள் மங்கையானாள். மகிழ்ச்சியில் இருந்த பெற்றோர்கள் திருமண ஏற்பாடு செய்தார்கள். திருமணமும் நடந்தது இல்லறம் நல்லறமானது.
சில மாதங்கள் கழித்து தனது பிரசவத்திற்க்காக தாய் வீட்டிற்கு வந்தாள். ஒன்பது மாதங்கள் ஆகிய கர்பகாலத்தில் அவளை அவளது பெற்றோர்கள் இருவரும் பாசத்தோடு கவனித்துக் கொண்டார்கள்.
திடீரென்று ஒரு நாள் அவள் உடல்நிலை குறைவாக காணப்பட்டாள், அவளது தாய் தனக்குத் தெரிந்த வைத்திய முறைகளை செய்துபார்த்தாள் ஆனால் அது பலன் கொடுக்கவில்லை. தனது கணவரிடம் தெரிவித்தாள். மருத்துவரை அழைத்து வர சொன்னார். ஆனால் இந்த கிராமத்தில் மருத்துவருக்கு எங்கு செல்வது. இருப்பினும் வழக்கமாக அழைக்கும் மருத்துவரை அழைத்தனர் ஆனால் அவர் தொடர்பில் இல்லை. அடுத்து வேறொரு மருத்துவரை அழைத்தனர் அவர் என்ன நோய் என்று கண்டறியாமல் நோய் எதிர்ப்பு ஊசி மட்டும் போட்டு சென்றார்.
இரண்டாவது நாள் காலை அந்த ஊர் முதியவர்கள் சொன்ன இயற்கை வழி சிகிச்சை செய்தும் பயனில்லை. தன் கண் முன்னே ஒன்பது மாத கர்பத்தோடு துடிக்க துடிக்க இறந்து போனாள் அந்த அழகு மங்கை.
மழையிலும் வெயிலிலும் சீராட்டி வளர்த்த தனது மகள் தன் கண் முன்னால் இறந்து கிடந்ததை கண்ட பெற்றோர்கள் கண்ணீரில் மூழ்கி போனர். பொறாமை கொண்ட அந்த மகனின் நெஞ்சம் கூட குமுறி குமுறி அழுதன.
என்ன நோய் என்று கண்டறிய முடியாத காரணம் ஒரு பக்கம். மருத்துவர்கள் பற்றாக்குறை மற்றொரு பக்கம் என அவனது மனம் துடிதுடித்தது.
இந்த மங்கையானவள் வேறு யாரும் இல்லை எங்கள் வீட்டில் வளர்ந்த பசுங்கன்று. கால்நடை மருத்துவர்கள் பற்றாக்குறையாலும் சரியான நேரத்தில் வராததாலும். எங்கள் வீட்டில் ஓர் உயிராய்... உறவாய் வாழ்ந்த வளர்ந்த கன்று இறந்துவிட்டது.
கன்றாய் பிறந்த நாள்முதல் இதை நல்ல பசுவாக மாற்ற மழையிலும் வெயிலுலும் உணவளித்தார் என் தந்தை.
எங்கள் குடும்பத்தில் ஒரு உறவாக இருந்த பசுவின் இறப்பு என் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இதை எழுத காரணம் ஆறறிவு மனித இனம் கூட எனக்கு இதுதான் பிரச்சினை என்று கூறி அழும் ஆனால் ஐந்தறிவு ஜீவன் என்ன செய்யும்.
இதைப் படிக்கும் நண்பர்கள் இக்கதையை மறுபடியும் அந்த பெண்ணை பசுங்கன்றாய் நினைத்து படித்துப் பாருங்கள். அப்போது புரியும்..
நல் உள்ளங்கள் கால்நடை மருத்துவம் படிப்பதோடு நின்று விடாமல் அந்த மருத்துவ சேவையை புன் சிரிப்போடும் இன் முகத்தோடும் நல்முறையில் அனைத்து கால்நடைகளுக்கும் அளிக்கும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு
பிரதாப் மோகன்
Super da
ReplyDeleteSuper da
ReplyDelete